புதன்கிழமை, நவம்பர் 5, 2008 |
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் வழங்கியுள்ள ரூ. 6 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகளும், தமிழக உணவுத்துறை ஒதுக்கியுள்ள அரிசி, பருப்புகள் ஆகியவையும் இரவு பகலாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.
80,000 பேருக்கு வழங்கும் வகையில் அவை பேக் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு 800 டன் உணவு பொருட்கள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து நிவாரண நிதியாக ரூ. 7 கோடியும் துணிமணிகள், அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும் குவிந்துள்ளன.
அரசுத் துறையான கோ-ஆப்டெக்ஸ் மூலம் சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான துணிகள் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் சங்கங்களில் இருந்து துணிகள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் திடலுக்கு கொண்டு வரப்படுகின்றன.
1 வேட்டி, 1 சேலை, 1 லுங்கி,1 நைட்டி, 2 துண்டுகள், 2 போர்வைகள் கொண்ட 80,000 பேக்குகளை கட்டப்பட்டு வருகின்றன.
இந்த பார்சல் செய்யும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த பணியில் 500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு பேக்கிலும் ‘இலங்கை தமிழர்களுக்கு இந்திய-தமிழக மக்களிடம் இருந்து’ என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
அதே போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 80,000 சிறு மூட்டைகளில் அரிசி, பருப்புகள் பேக் செய்யப்பட்டு வருகின்றன.
15 கிலோ அரிசி 2 கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, டீ தூள் பாக்கெட்2, குளிக்கும் சோப்பு, சலவை சோப்பு, பேஸ்ட் ஆகியவை கொண்ட 80,000 மூட்டைகள் பார்சல் செய்யும் பணியும் சென்னையில் நடந்து வருகிறது.
விருகம்பாக்கம், நந்தனம், திருவான்மியூர் ஆகிய சிவில் சப்ளை நிறுவன குடவுன்களில் இந்த பணி நடக்கிறது.
இந்த நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.