கோர்ட்டுக்கு நேரடியாக வந்து குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க தயாரா? என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
பதில் நோட்டீஸ்
சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கோவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கருத்து கூறி இருந்தார். அது தனது நன்மதிப்பை கெடுத்ததால், இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கருணாநிதிக்கு ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வக்கீல் நவநீதகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதியின் சார்பில் நவநீதகிருஷ்ணனுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் அனுப்பிய பதில் நோட்டீஸ் வருமாறு:-
பொறுப்புள்ள குடிமகன்
ஜெயலலிதாவுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்தது. அதில் கூறப்பட்டு உள்ள கருத்துகள் அனைத்தையும் அவர் மறுக்கிறார். நோட்டீசில் கூறியவற்றை சட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும். உண்மையிலேயே ஜெயலலிதா ஒரு பொறுப்புள்ள பிரஜையாக இருந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அவர் கேட்டிருக்க மாட்டார்.
மாறாக, அந்த மோதலுக்கான காரணத்தை அறிந்து, அங்குள்ள மாணவர்களின் மனதில் உள்ள சாதிய எண்ணங்களை களைய ஜெயலலிதா முன்வந்திருப்பார். சாதி ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பற்றி மாணவர்களிடம் கூறி இருப்பார். அதை விட்டுவிட்டு, கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது, அவர் பொறுப்புள்ளவர் என்பதைக் காட்டாது.
பதவி விலகல் – தொடர்ச்சியான பாராயணம்
முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றதில் இருந்தே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா அடிக்கடி கேட்டு வருகிறார். தினமும், கருணாநிதி அல்லது பிரதமர் அல்லது வேறு யாரையாவது பதவி விலக வேண்டும் என்று கேட்பது ஜெயலலிதாவுக்கு வழக்கமாக உள்ளது.
ஜெயலலிதாவைவிட புகழ் பெற்ற மற்றும் நல்ல தன்மையுள்ள கருணாநிதியை ராஜினாமா செய்யக் கூறுவது, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு அழகல்ல.
நீங்கள் கூறி இருக்கும் கருத்தைப் பார்க்கும் போது, ஒருவரை ராஜினாமா செய்யக் கோருவதுதான் ஒரு குடிமகனின் பொறுப்பு என்றே ஜெயலலிதா கருதுகிறார் போலும். அதிக குளிரூட்டப்பட்ட அறையிலோ அல்லது உயர்ந்த மலைப் பகுதிகளிலோ ஜெயலலிதா இருந்து கொண்டு, அவரது கட்சியின் அப்பாவித் தொண்டர்களையோ அல்லது வாடகைக்கு அமர்த்தப் பட்டவர்களையோ வைத்து தெருக்களில் கத்த வேண்டாம். அதையே பெரிய பொறுப்பு என்று நினைத்து திருப்தி அடைய வேண்டாம்.
எது அதிர்ச்சி அளித்தது?
முதலில், இந்தியக் குடிமகனின் கடமை, பொறுப்பு பற்றி ஜெயலலிதா தெரிந்து கொள்ளட்டும். அரசியல் அமைப்பில் கூறப்பட்டு இருக்கும் பொறுப்புகள் பற்றி முதலில் அவர் நன்றாக படிக்கட்டும். தற்போது ஜெயலலிதா மற்றவர்களிடம் அறத்தைப் பற்றி போதிக்கிறார்.
கல்லூரியில் நடந்த மோதல் பற்றி ஜெயலலிதா கூறும் போது, `அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்’ என்று குறிப்பிட்டார். ஆனால் தர்மபுரி அருகே 3 வேளாண் கல்லூரி மாணவிகள், அவரது கட்சியினரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை, அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம் என்று குறிப்பிடவே இல்லையே.
குற்றவாளிகள், அன்னியச் செலவாணி மோசடி செய்கிறவர்களிடம் ஏன் ஜெயலலிதா நெருக்கமான உறவு வைத்துள்ளவராகக் காணப்படுகிறார் என்பதை அவர் விளக்கட்டும்.
மனசாட்சி விழிக்கவில்லையா?
2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்யப்பட்ட பிறகும், அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை மீறி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன கோர்ட்டு நீதிபதிகள் கண்டித்து உங்களை பதவி விலகக் கூறினர்.
இப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்த முதல் இந்தியப் பிரஜை ஜெயலலிதாதான். அவருக்கு இருக்கும் மனசாட்சி மற்றும் தார்மீகப் பொறுப்புகள் அனைத்துமே சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது `டாட்டா’ காட்டிச் சென்றுவிடும்.
அவரது கட்சியைச் சேர்ந்த மதுராந்தகம், தூத்துக்குடி, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்ட போது, அதை அதிர்ச்சியான சம்பவம் என்று கூறவில்லையே.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்ட போதும் அதற்கும் அதிர்ச்சி அடையவில்லையே. அப்போது இருந்த முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அவரது மனச்சாட்சி கேட்கவில்லையே. அப்போது முதல்-அமைச்சராக இருந்தவர் யார் என்பது அவருக்குத் தெரியும்.
வெள்ள நிவாரணம் வழங்கும் போது மக்கள் பலர் நெரிசலில் சிக்கி இறந்த போதும் அவரது மனச்சாட்சி விழித்துக் கொள்ளவில்லையே.
ஆடிட்டர் ராஜசேகரன்
காபிபோசா சட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட போது அவரது மனச்சாட்சி செயல்படவே இல்லையே. அதுபோல் அப்போது அவரது தார்மீகப் பொறுப்பும் செயல்படாமல் போய்விட்டதே. காலசூழல் மாறுவதற்கு ஏற்பவும் அதிகாரம் கிடைப்பதற்கு ஏற்பவும் அவரது தார்மீகப் பொறுப்பும் மாறுகிறது.
நீண்டகால நண்பரும் அவரது ஆடிட்டருமான ராஜசேகரன் திடகாத்திரமாக போயஸ் தோட்ட வீட்டுக்குள் சென்று விட்டு, வெளியே வரும் போது கடுமையான காயமடைந்தவராக வந்தாரே, அதன் காரணத்தை இன்னும் ஜெயலலிதா விளக்கவில்லையே ஏன்? அவர் அங்கு ரத்தம் சிந்தியது, ஜெயலலிதாவுக்கு விளையாட்டாகவும், கேளிக்கையாகவும் இருந்ததோ?
உள்நோக்கம் இல்லை
ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு கருணாநிதிக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அப்படிப்பட்ட நோக்கம் உள்ளவராக இருந்திருந்தால், ஜெயலலிதா கட்சி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றிய போது, அவர்களை மீண்டும் அவைக்குள் அழைக்க தனது அமைச்சர்களை கருணாநிதி அனுப்பி இருக்க மாட்டார். அவைக்கு வர அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு பயந்து வராமல் போய்விட்டார்கள். ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்றாவது அவைக்கு வரும்படி கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
வயதான முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதி என்ற வகையில், எதிர்க்கட்சியினருக்கும் கருணாநிதி நேசக்கரம் நீட்டுகிறார். அப்படி இருந்தும் மின்வெட்டு பிரச்சினையில் பேசுவதற்கு ஜெயலலிதாவின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. இதன்மூலம் தன் பொறுப்பை தட்டிக் கழித்து, தன்னை தேர்ந்து எடுத்து அனுப்பிய மக்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
வைரம் படத்தில்
மதிப்பு, பெருமை, மரியாதை, நன்மதிப்பு போன்றவை பற்றி ஜெயலலிதா தனது நோட்டீசில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது கட்சியின் அவைத் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனை `உதிர்ந்த மயிர்’ என்று விமர்சித்த போதும், ஜெயலலிதாவின் மதிப்பு பற்றி மக்கள் அறிந்து கொண்டனர்.
3-வது அணியில் இருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா செயல்பட்ட விதத்தைக் கண்டு, அவரது நன்மதிப்பை மக்கள் தெரிந்து கொண்டனர்.
கோடநாடு எஸ்டேட் விவகாரத்திலும் மக்கள் அவரது பெருமைகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர்.
கோர்ட்டில் தனது கையெழுத்தை தன்னுடையது அல்ல என்று மறுத்தவர் ஜெயலலிதா.
சென்னை ஐகோர்ட்டு முதல் பெஞ்ச் மற்றும் விசாரணைக் கமிஷன் முன்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் போது கூட, உண்ணாவிரதம் இருந்து அதற்கு தேவையற்ற விளம்பரத்தை தேட முற்பட்டவர் அவர். அதிலிருந்தே சட்டத்தை அவர் எப்படி மதிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்
சட்டத்தை மதிப்பவர் என்று கூறி அவர் அனுப்பிய நோட்டீசை படித்து கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். சட்டங்களை எப்படி அவர் மதிக்கிறார் என்பதை,
வருமான வரிக் கணக்கு, சொத்து வரிக் கணக்கு ஆகியவற்றை தாக்கல் செய்யாமல் இருந்தும், அரசுச் சொத்தை வாங்கியதில் இருந்துமே தெரிந்து கொள்ளலாம்.
வன்முறையை எப்போதும் எதிர்ப்பவர் என்று தன்னை ஜெயலலிதா கூறிக் கொள்கிறார். பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு தீர்ப்பின் போது அதை கடைபிடித்து இருந்தால், 3 உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்குமே.
பள்ளிக்கான அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் விதிமுறைகளை கடைபிடித்து இருந்தால், கும்பகோணத்தில் டசன் டசனாக குழந்தைகளை நாம் சாகக் கொடுத்து இருக்க மாட்டோமே.
ஜெயலலிதாவும் அவரது தோழியும் பொது இடமான மகாமக குளத்தில் குளிப்பதை தவிர்த்து இருந்தால் எத்தனையோ உயிர்கள் பிழைத்து இருக்குமே.
இவர் சாலையில் பயணிக்கும் போது, நூற்றுக் கணக்கில் வாகனங்களும் மக்களும் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டார்களே. ரெயிலில் ஜெயலலிதா சென்றார் என்ற செய்தியை மக்கள் கேட்டதே இல்லையே.
இரக்கமில்லாமல்
டெஸ்மா சட்டத்தைக் கொண்டு வந்து இரக்கமில்லாமல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்தது யார்?
இந்த பின்னணிகளை வைத்துக் கொண்டு அவர் வேதம் ஓதுகிறார். பொதுநலன், பொதுமக்கள், வன்முறை, சட்டம் பற்றி அவர் பேசாமல் இருப்பது நல்லது.
தனக்கு மன வேதனை ஏற்பட்டு உள்ளதாக நோட்டீசில் ஜெயலலிதா கூறி இருக்கிறார். அரசியல் களத்தில் அவருக்கு தொடர்ந்து ஏற்பட்ட தோல்வியால் கூட இருக்கலாம். தனக்கும், தனது கட்சியின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் அவர்தான் அவை இருக்கிறதா என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும்.
தனது கட்சித் தலைவர்களையே ஜெயலலிதா சந்திப்பதில்லை. அவரது செயல்பாடு எல்லோருக்கும் தெரியும். கூட்டணிக் கட்சியினரும் அவரை சந்திக்க முடியாது. எனவே, கருணாநிதியின் கருத்து பற்றி தனது கட்சியினர் போன் செய்து தன்னிடம் பேசி, விசாரித்தனர் என்று ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது.
இதுவா தேசபக்தி?
சட்டம் ஒழுங்கு பற்றி கூட ஜெயலலிதா குறிப்பிட்டு இருக்கிறார். அவரது காலத்தில் கோர்ட்டு அளித்த தீர்ப்புகளில் சட்டம் ஒழுங்கு பற்றி என்ன கருத்துகள் கூறப்பட்டன என்பதைப் பார்க்க முடியும்.
அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாணவர் போராட்டம், மோதல்கள், சாதிச் சண்டைகள், பட்டப் பகலில் கொலை, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போன்றவை தினசரி சம்பவங்களே. பத்திரிகை சுதந்திரமும் கேள்விக்குறியாகவே இருந்தது.
3 லட்சம் அமெரிக்க டாலர்களை வாங்கியதில் இருந்து அவரது தேச பக்தியை தெரிந்து கொள்ளலாம். இதை அனுப்பியவர்களின் பெயர், முகவரி தெரியாதாம். தற்போது மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறார்.
ஜெயலலிதா கோடியில் புரளுகிறவர் என்பது கருணாநிதிக்குத் தெரியும். பங்களா, மிகவும் உயர்ந்த ஓட்டல்களில் தங்கும் வழக்கத்தைக் கொண்டவர் அவர். இதனால் மட்டும் மரியாதை ஒட்டிக் கொண்டு இருப்பதாக நினைத்து விடக்கூடாது.
குறுக்கு விசாரணைக்கு தயாரா?
ஜெயலலிதா கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 19-ந் தேதி முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதமே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள். கையெழுத்து போடாமல் நோட்டீஸ் அனுப்பியதே சட்டப்படி தவறு. விளம்பரத்துக்காக இப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
உண்மையிலேயே அவர் சட்டத்தை மதிப்பவராக இருந்தால், வக்கீல் வைக்காமல், யார் மூலமாவது நிழல் யுத்தம் நடத்தாமல் அவரே கோர்ட்டுக்கு நேரடியாக வர வேண்டும். நன்மதிப்பு, அவதூறு தொடர்பாக அங்கு கருணாநிதி மேற்கொள்ளும் குறுக்கு விசாரணைக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
November 23, 2008
Categories: தமிழக அரசியல், திமுக செய்திகள் . Tags: தமிழக அரசியல் . Author: உதயசூரியன் . Comments: Leave a comment