சென்னை: உசிலம்பட்டி அருகே தனது கார் மீது நடந்த தாக்குதல் குறித்தும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலியானது குறித்தும் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில், அங்கு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் ஏழுமலை என்ற இடத்தில் தாக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந் நிலையில் இடகோட்டைப்பட்டி என்ற இடத்தில் நேற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.
இந் நிலையில் முதல்வரை சந்தித்தார் கிருஷ்ணசாமி, 30 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நடந்த சம்பவம் குறித்து முதல்வரிடம் விளக்கினேன். துப்பாக்கி சூட்டில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு அரசு ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
பலியான வாலிபர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும் கோரினேன். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமர்வு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் முதல்வரிடம் கேட்டிருக்கிறேன்.
எனது கார் மீது நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் தொண்டர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெற வேண்டும், கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும், என்றும் முதல்வரிடம் கூறினேன்.
இறந்த வாலிபரின் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்வேன் என்றார்.
துப்பாக்கி சூடு-பலி: விசாரணைக்கு உத்தரவு:
முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர்/ உட்கோட்ட நீதிபதி அளவில் நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏழுமலையில் தொடரும் பதற்றம்:
இதற்கிடையே உத்தப்புரம், எழுமலை, அணைக்கரைப்பட்டி, சீலநாயக்கன்பட்டி போன்ற கிராமங்களுக்கு 3வது நாளாக இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இப் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
எழுமலை, இடகோட்டைப்பட்டி கிராமத்தில் மதுரை மாவட்ட எஸ்பி மனோகர் தலைமையில் போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தி 20 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், கலவரத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தப் பகுதியில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.